Friday, October 19, 2012

முட்களில் மோதி மோதியே தினம் தினம்
     உடைந்து போகின்றன கனவுகள் 
கண்களில் இருந்து உடைந்து விழுகின்றது 
     இறுதியாக இருந்த கண்ணீர் துளியும் 
சேமித்து வைத்த கடுகளவு நம்பிக்கையும் 
     கலைந்து காற்றில் கலந்து விட்டது
 இருந்தும் எனது பயணம் தொடர்கிறது
     பூதம் உமிழ்ந்து விட்ட வெளியில் 
இல்லாத இலக்கை நோக்கி................ !    
 



Saturday, March 24, 2012

வெண்பனி மூடிய வீதிகள்
பச்சையமிழந்த மரங்கள் 
தாம் துளிர்விடுவோம் என்ற 
நம்பிக்கையில் இன்னமும் 
கையசைத்து மகிழ்கின்றன 

உதிர்வதும் தழைப்பதும்
மறுக்க முடியாதென்றாலும்
பழங்கதை பேசி மகிழ
கொஞ்ச பழுத்தல்களாவது
மிச்சமிருந்திருக்கலாம்

இறைவனின் படைப்பில் தான்
எத்தனை பாகுபாடு
சஹாராவில் வீசும் வெப்பத்தை
இங்கும் கொஞ்சம் தந்திருக்கலாம்
ஏனோ இந்த கஞ்சத்தனம்


வசந்த காலம் ஆரம்பம் என்று
யாரோ சொல்லியதை நம்பி
குதூகலத்துடன் புறப்பட்டேன்
நெற்றியில் சில்லென விழுந்தது
வானம் தூவிய பனிதுளி...........
                                                                   அகல் 






Saturday, March 17, 2012

 உறக்கத்தில் உயிர் பெற்றெழும்
            கனவுகளாய் ஆயிரமாயிரம் நினைவுகள்
நினைவுக்கும் நிஜத்திற்கும் இடையே 
          சலனமற்ற போர் சத்தமின்றி நடக்கிறது 


தூக்கி எறியப்படும் குப்பை போல சிலநாள் 
        பாராட்டி வாழ்த்தி பட்டம் தந்து சிலநாள்
மொத்தத்தில் காற்றில் ஆடும் சருகை போல 
         வாழ்க்கையும் அங்குமிங்கும் அலைந்து போகிறது 














Sunday, March 11, 2012

பிறருக்காக கரைந்து கொண்டிருந்த
மெழுகுதிரி மௌனமாக அழுதது- தனக்காக
கருகிய தீக்குச்சியை நினைத்து


Monday, February 20, 2012

நிலா சிந்தும் இரவு
திக்கு தெரியாத காடு
சிந்தனையில் ஊறிய
பல நூறு எண்ணங்கள்
உறக்கம் தொலைத்த
விழிகள் - புன்னகை
வற்றிப்போன  உதடுகள்
புரிந்தும் புரியாத தனிமை
எனக்காக நான் மட்டுமே..


                                                

Saturday, February 11, 2012

மரத்து போன மானிடத்திற்குள்
மனிதர்களை தேடுகின்றது-பாவம் 
அவர்கள் மனிதத்தை தொலைத்து 
வாழும் போலி தோல் போர்த்த 
மரப்பிறவிகள் என அறியாது......


பூமி என்னை மட்டும் விட்டு 
சுழல்வது போல ஒரு உணர்வு 
என்னுளே தனிமை மட்டும்
துணை கூட அது  மட்டுமே.........!




Monday, January 9, 2012

வாழ்க்கை

நண்பர்கள் அருகில் 
 இருக்கும் போது
பகிர்ந்து கொள்ள 
எதுவும் இருந்ததில்லை 
இப்போது நண்பர்கள் 
கூட இல்லை -ஆனால்
பகிர்ந்து கொள்ள 
நிறைய விடயங்கள்